Tamilவிளையாட்டு

இந்திய குத்துச்சண்டை வீராங்கனையின் பயிற்சியாளர் பிரச்சனையை தீர்க்க விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த போட்டியில் மகளிருக்கான குத்துச் சண்டை பிரிவில், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்து லவ்லினா போர்கோஹைன் பங்கற்றுள்ளார்.

இந்நிலையில் காமன்வெல்த் கிராமத்தில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் சந்தியா குருங் வெளியேற்றப்பட்டு விட்டார் என டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். தமது பயிற்சியாளர் சந்தியா குருங்கிற்கு காமன்வெல்த் அதிகாரிகள் தடை விதித்ததாகவும் இதனால் தமது பயிற்சி தடைபட்டுள்ளதுடன், மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பிரச்சினையில் தலையிட்ட மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்தாக்கூர், குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைனின் தனிப்பட்ட பயிற்சியாளர் சந்தியா குருங்கிற்கு உரிய அங்கீகாரம் மற்றும் அனுமதி அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, காமன்வெல்த் போட்டி நடைபெறும் பகுதிக்குள் நுழைவதற்கான உரிய அங்கீகாரம் மற்றும் அனுமதியை குத்துச் சண்டை பயிற்சியாளர் சந்தியாவுக்கு குருங்கிற்கு வழங்க இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றுள்ள 12 குத்துச்சண்டை வீரர்களுக்கு (8 ஆண்கள் மற்றும் 4 பெண்கள்) 4 துணை ஊழியர்கள் (உட்பட) பயிற்சியாளர்கள், பர்மிங்காம் நகருக்கு செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது.