Tamilசெய்திகள்

இ-சிகரெட் வைத்திருப்பது குற்றம் – மத்திய அரசு எச்சரிக்கை

மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு, மின்னனு சிகரெட் தடை சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி இ-சிகரெட் எனப்படும் மின்னனு சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி, இறக்குமதி செய்தல், விற்பனை, வினியோகம் செய்தல், இருப்பு வைத்தல், விளம்பர செய்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இ-சிகரெட்டின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்படவில்லை.

இதற்கிடையே, இ-சிகரெட் தடை சட்டத்தில், சிறைத்தண்டனை, அபராதம் போன்ற கடுமையான விதிமுறைகள் இருப்பதையும் மீறீ, இ-சிகரெட் சர்வசாதாரணமாக புழங்குவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக, இளைஞர்கள் அதை பயன்படுத்துவது, மத்திய அரசுக்கு கவலை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இ-சிகரெட் தடையை உறுதியுடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியது. மேலும், அந்த சிகரெட்டை விற்பனை செய்த 15 இணையதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், இ-சிகரெட்டை எந்த வடிவலும், எந்த எண்ணிக்கையிலும், எந்த முறையிலும் வைத்திருப்பது இ-சிகரெட் தடை சட்டத்தை மீறிய குற்றம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுப்படுத்தி உள்ளது. மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இதன் மூலம், ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றம் என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. மேலும், இந்த தடையை மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்க ஒரு இணையதளத்தையும் சுகாதார அமைச்சகம் தொடங்கி உள்ளது.