Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் – முதலிடத்திற்கான கடும்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா நான்கு போட்டிகளில் விளையாடி தோல்வியை சந்திக்காமல் உள்ளன.

இரு அணிகளுக்குமிடையில் புள்ளிகள் பட்டியலில் கடும் போட்டி நிலவி வருகிறது. தலா மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா முதலிடம் வகித்தது. சென்னையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் இடம் பிடித்தது. நேற்று வங்காளதேசம் அணியை வீழ்த்தியதன் மூலம் இந்தியா 4 வெற்றிகளுடன் முதல் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முதலிடம் வகிக்கிறது. நியூசிலாந்து 1.923 ரன்ரேட் உடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 1.659 ரன்ரேட் உடன் 2-வது இடத்தில் உள்ளது.

வரும் போட்டிகளில் இந்தியா அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் அல்லது நியூசிலாந்து தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டால் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும். தென்ஆப்பிரிக்கா 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ரன்ரேட் அடிப்படையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

பாகிஸ்தான் 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ரன்ரேட் அடிப்படையில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 5-வது இடத்தையும், ஆஸ்திரேலியா 6-வது இடத்தையும் பிடித்துள்ளது. வங்காளதேசம், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் முறையே 7 முதல் 10-வது இடங்களை பிடித்துள்ளன.