Tamilசெய்திகள்

எதிர்க்கட்சி கூட்டத்தை பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது – பிரபுல் பட்டேல் பேச்சு

எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். மேலும் ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார். அஜித்பவார் தரப்பினர் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்தது. இந்தக் கூட்டம் பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள புஜ்பால் நாலேஜ் சிட்டி அரங்கில் நடந்தது. இந்நிலையில், அஜித்பவார் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்தில் பிரபுல் பட்டேல் பேசியதாவது:

சிவசேனாவின் சித்தாந்தத்தை நாம் ஏற்கும்போது, பா.ஜ.க.வுடன் செல்வதில் என்ன ஆட்சேபணை? இந்தக் கூட்டணியில் நாங்கள் சுதந்திரமான அமைப்பாக இணைந்துள்ளோம். மெகபூபா முப்தி மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.வுடன் சென்று இப்போது எதிர்க்கட்சியினருடன் அங்கம் வகிக்கின்றனர்.

பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்திற்கு சரத் பவாருடன் சென்றிருந்தேன் நான். அங்கிருந்த காட்சியைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. அங்கு 17 எதிர்க்கட்சிகள் இருந்தன. அவற்றில் 7 கட்சிகளுக்கு 1 மக்களவை எம்.பி. மட்டுமே உள்ளனர். ஒரு கட்சிக்கு ஒரு எம்பியும் இல்லை. அவர்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என கூறுகிறார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது தொடர்பாக நாங்கள் எடுத்த முடிவு தேசத்துக்காகவும், எங்கள் கட்சிக்காகவும் தான். தனிப்பட்ட லாபத்திற்காக அல்ல என தெரிவித்தார்.