Tamilசெய்திகள்

ஏசியன் – இந்தியா, கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா புறப்படுகிறார்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

இதற்காக இன்று இரவு இந்தோனேசியா புறப்படும் பிரதமர் மோடி, 7-ந்தேதி மாலை இந்தியா திரும்புகிறார். இந்தியாவில் ஜி-20 மாநாடு நடைபெற இருக்கும் நிலையில், குறுகிய பயணமாக இது அமைந்துள்ளது. இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசியன் (ASEAN) அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனை, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியோ ஆகிய 10 நாடுகள் உள்ளன.

கடந்த சில வருடங்களாக வணிகம், முதலீடு, பாதுகாப்பு போன்றவற்றில் ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி வருவதால் இந்தியா-ஏசியன் இடையிலான உறவு அதிகரித்துள்ளது. மோடி, 10 நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இந்தியா- ஏசியன் கடல்சார்ந்த பாதுகாப்பு ஒத்த்துழைப்பு குறித்து புதிய முயற்சி உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

முதலில் 20-வது ஏசியன்-இந்தியா மாநாட்டில் கலந்து கொண்டபின், 2-வதாக 18-வது கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொள்கிறார். ஆசிய பிராந்தியத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்ததாக ஏசியன்-இந்தியா திகழ்கிறது.