Tamilசெய்திகள்

ஐடி துறையில் பணியாற்றிக் கொண்டு பகுதி நேரமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

சென்னை பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் கஞ்சா வியாபாரம் செய்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 1.2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் விஷ்ணு (27) என்றும், ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், பகுதி நேர வேலையாக கஞ்சா விற்று வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல, அனகாபுத்தூர் பகுதியில் கஞ்சா விற்று வந்த அஜய் (21), செல்வம் (28) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.