Tamilவிளையாட்டு

ஐபிஎல் கோப்பையை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வெல்ல வேண்டும் – சுரேஷ் ரெய்னா விருப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நொய்டாவில் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ராஞ்சி டெஸ்டில் துருவ் ஜூரெலின் விக்கெட் கீப்பிங் என்னை கவர்ந்தது. இந்த நிலையை எட்ட அவர் கடுமையாக உழைத்து இருக்கிறார். அவர் ராணுவ குடும்பத்தில் இருந்து வந்தவர். எனவே எங்கும், எப்போதும் எதையும் இழக்க விரும்பாத அச்சமற்ற மனப்பான்மை அவரிடம் உண்டு. ஜூரெல் அற்புதமான வீரர். நான் அவருடன் இணைந்து உத்தரபிரதேச அணிக்காக ஓரிரு போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த முறை விராட்கோலியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் நீண்டகாலமாக கோப்பையை வெல்லாமல் உள்ளனர். கடந்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது. ஆனால் இந்த ஆண்டு கோப்பையை ஒருமுறையும் கைப்பற்றாத பெங்களூரு அணி மகுடம் சூடும் என்று நம்புகிறேன். விராட்கோலி உண்மையிலேயே கடுமையாக உழைத்துள்ளார். அவர் இந்த முறை கோப்பையை வெல்ல தகுதியானவர் என்று கருதுகிறேன்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட்இண்டீசில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் கலவை முக்கியமானது. இன்னிங்சை கட்டுப்படுத்த விராட்கோலி போன்ற ஒருவர் அணிக்கு தேவையாகும். கோலி இலக்கை வெற்றிகரமாக விரட்டுவதில் மாஸ்டர். அத்துடன் நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.