Tamilசெய்திகள்

ஒடிசாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் இன்று நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளதாவது:-

கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஏப்.14 வரை இருந்த ஊரடங்கு ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிலையங்களும் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ரெயில், விமான சேவையை நீட்டிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒடிசாவில் 42 பேருக்கு கொரோனா உள்ள நிலையில் இதுவரை ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றிலிருந்து இருவர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கை நீட்டித்துள்ள முதல் மாநிலம் ஒடிசா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *