Tamilசெய்திகள்

ஓ.பன்னீர் செல்வத்தின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு கலவரம் உண்டானது. இதனையடுத்து அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்தனர். இதை எதிர்த்து இரு தரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த மாதம் (ஆகஸ்டு) 18-ந்தேதி விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து தமிழக அரசின் சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று தமிழக அரசு செயல்பட்டுள்ளது. எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அவர் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தி, அலுவலகத்துக்குள் புகுந்து ஆவணங்களை திருடி சென்றுள்ளார்.

எனவே அவரது மேல்முறையீட்டு மனுவை ஏற்றால் வன்முறையை ஊக்குவிப்பதாகி விடும். வன்முறை அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறவில்லை. அதன் பக்கத்தில் உள்ள பகுதியில்தான் நடைபெற்றது. எனவே அ.தி.மு.க. அலுவலகத்திற்கு ‘சீல்’ வைக்க முடியாது. அ.தி.மு.க. அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரியே என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தலைமை அலுவலகம் செல்ல உரிமை உண்டு என ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள், ஒரு அரசியல் கட்சியின் அலவலகத்தை முடக்கினால் எப்படி அந்த அரசியல் கட்சி இயங்க முடியும், ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று அறிவித்த உச்சநீதிமன்றம், ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.