Tamilவிளையாட்டு

கடைசி வரை களத்தில் நிற்பது தான் முக்கியம் – சூர்யகுமார் யாதவ்

இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்தார்.

பின்னர் இந்தியா சேஸிங் செய்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 40 ரன்களும், இஷான் கிஷன் 35 ரன்களும் அடித்தனர். அடுத்து வந்த விராட் கோலி 17 ரன்னிலும், ரிஷாப் பண்ட் 8 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்தியா 14.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்திருக்கும்போது 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி 33 பந்தில் 44 ரன்கள் தேவைப்பட்டது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 18 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து இலக்கை 18.5 ஓவரில் எட்ட முக்கிய காரணமாக இருந்தார். இவரும் வெங்கடேஷ் அய்யரும் 5-வது விக்கெட்டுக்கு 4.2 ஓவரில் 48 ரன்கள் விளாசினர். வெங்கடேஷ் அய்யர் 13 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த போட்டிக்குப்பின் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் ‘‘கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற வைப்பது முக்கியமானது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதெிரான கடைசி போட்டியில் 32 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தேன். கடைசி வரை நிற்க முடியவில்லை. அதேபோல் சூழ்நிலையை நான் அதிக முறை எதிர்கொண்டுள்ளேன்.

20 முதல் 25 ரன்கள் வரை அணிக்கு தேவை இருக்கும்போது, நான் அவுட்டாகும் போதெல்லாம் ஓட்டலுக்கு திரும்பும்போது மோசமானதாக கருதுவேன். வெங்கடேஷ் அய்யர் நேர்மறை எண்ணத்துடன் களம் இறங்கினார். இன்னிங்சை பவுண்டரியுடன் தொடங்கினார். இலக்கை வெற்றிகரமாக முடிக்க சரியான நேரம் என எண்ணினேன்’’ என்றார்.