Tamilசினிமா

சினிமாவை நினைத்து பயந்துட்டேன் – நடிகர் மாஸ்டர் மகேந்திரன்

பீப்பிள் புரோடக்ஷன் ஹவுஸ் சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், என்.வி. கிரியேஷன்ஸ் நாகராஜன் இணைந்து தயாரிக்கும் அமீகோ கேரேஜ் என்ற படத்தை இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மகேந்திரன் சினிமாவை நினைத்து பயந்ததாக தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர், “நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள், அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார்.”

“முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி,” என்று தெரிவித்தார்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர். இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் மார்ச் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது.