Tamilசெய்திகள்

ஜன்னல் இருக்கைக்காக கூடுதல் கட்டணம் செலுத்திய பயணிக்கு உடைந்த இருக்கை வழங்கிய ஏர் இந்தியா!

ஏர் இந்தியா விமான பயணத்தின் போது உடைந்த இருக்கைகள் மற்றும் குஷன் வசதி இல்லாத இருக்கைகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக பயணிகள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற ஏர்இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் உடைந்த இருக்கை தொடர்பாக பதிவிட்ட பதிவு தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பயனர் ஜன்னலோர இருக்கைக்காக கூடுதலாக ரூ.1,000 செலுத்தி உள்ளார். ஆனால் விமானத்தில் ஏறியதும் அவரது இருக்கை உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இருக்கையை புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர் தனது பதிவில், ஏப்ரல் 4-ந் தேதி டெல்லியில் இருந்து பெங்களூருக்கு சென்ற போது ஜன்னலோர இருக்கைகக்காக கூடுதலாக ரூ.1,000-ம் செலுத்தினேன். ஆனால் அதன் பிறகு எனது இருக்கை உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

இவ்வளவு பணம் செலுத்திய பிறகும் குறைந்த பட்சம் சரியான இருக்கையாவது எதிர்பார்க்க முடியாதா? என்று பதிவிட்டிருந்தார். மேலும் தனது பதிவுடன் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்தையும் போஸ்ட்டில் சேர்ந்திருந்தார்.

அவரது இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து ஏர்இந்தியா நிறுவனம் சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், ஏமாற்றம் அளிக்கும் அனுபவத்திற்கு வருந்துகிறோம். தயவு செய்து உங்கள் முன்பதிவு விபரங்களை எங்களுக்கு மெசேஜ் செய்யுங்கள். சரிபார்த்து உங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.