Tamilவிளையாட்டு

டிசம்பர் 16 ஆம் தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம் பெங்களூரில் நடைபெறுகிறது

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் கடைசி வாரம் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என மோதும் வகையில் போட்டி அட்ட வணை அமைக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16-ந்தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டியில் விளையாடும் 10 அணிகளும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.பி.எல். உரிமையாளர்களிடம் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

ஒவ்வொரு அணியும் வீரர்களுக்கு ஒதுக்கும் தொகை ரூ.90 கோடியில் இருந்து ரூ.95 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த முறையை விட ரூ.5 கோடி அதிகரிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான ஐ.பி.எல். உரிமையாளர்கள் 15 முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டு எஞ்சிய வீரர்களை ஏலத்தில் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏலத்துக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளிடம் முறையே ரூ.3.45 கோடி, ரூ.2.95 கோடி மீதமுள்ளன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முழு பர்சையும் தீர்த்து விட்டது.