Tamilவிளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் – கோவை கிங்ஸை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்தகட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரரான அஷ்வின் வெங்கட்ராமன் 6 ரன்னில் அவுட்டானார். சுரேஷ்குமார் 22 பந்தில் 1 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 25 ரன், ஷிஜித் சந்திரன் 17 ரன், முகிலேஷ் 2 ரன் எடுத்து வெளியேறினர். செல்வகுமார் டக் அவுட்டானார். அபிஷேக் தன்வார் 28 ரன்னில் அவுட்டானார். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடினார். அரை சதமடித்த அவர் 51 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது. இதையடுத்து, களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்ததுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணியில் கேப்டன் கவுசிக் காந்தி 9 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராதா கிருஷ்ணன் 8 ரன்னுடனும், சசிதேவ் 1 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சாய் கிஷோர் – நாராயணன் ஜெகதீசன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிபட்சமாக நாராயணன் ஜெகதீசன் 51 பந்துகளில் 75 ரன்களை குவித்தார். சாய் கிஷோர் 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.