Tamilவிளையாட்டு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – வெற்றியாளர் குறித்து ரிக்கி பாண்டிங் கணிப்பு

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட், மெல்போர்ன், சிட்னி போன்ற புகழ்பெற்ற மைதானங்களில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. கடந்த 2021-ல் துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பையை முதல் முறையாக வென்ற ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா இம்முறை கோப்பையை தக்க வைக்க சொந்த மண்ணில் களமிறங்குகிறது.

இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த டி20 உலக கோப்பையில் இறுதிப்போட்டியில் விளையாட போவது யார் மற்றும் வெற்றியாளர் யார் என்பதை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.

இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தும். இறுதி போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் நடப்பு சாம்பியனான அவர்களுக்கு சொந்த மண் சூழ்நிலைகள் சாதகமாக கிடைத்துள்ளது.

வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இங்கிலாந்து மிகச்சிறந்த அணி என்று நான் நினைக்கிறேன். தற்போதைய நிலைமையில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 அணிகளில் மட்டுமே உலகத்தரம் மற்றும் கிளாஸ் நிறைந்த மேட்ச் வின்னர் வீரர்கள் நிறைந்துள்ளார்கள்.

அதேபோல் பாபர் அசாம் ரன்கள் அடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளும் எதிர்பாராத வகையில் அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டை நான் அதிகமாக பார்த்துள்ளேன். அந்த வகையில் நியூசிலாந்து அல்லது வெஸ்ட் இண்டீஸ் அல்லது பாகிஸ்தான். இந்த அணிகள் டி20 கிரிக்கெட்டில் மிகவும் விரும்பி விளையாடுகின்றன. மேலும் டி20 அவர்களுக்கு மிகவும் பொருத்தமாகவும் அமைகிறது. எனவே அவர்களில் யாராவது ஒருவர் இறுதிப்போட்டியில் விளையாடினாலும் நான் ஆச்சரியப்பட போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.