Tamilவிளையாட்டு

டோனியின் மீதான விமர்சனங்கள் ஆச்சரியமளிக்கிறது – சஞ்சய் பாங்கர் கருத்து

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைய டோனி, கேதர் ஜாதவ்தான் மிக முக்கிய காரணம் என ரசிகர்கள் கூறி வந்தனர். இங்கிலாந்துடனான போட்டியில் கடைசி 5 ஓவரில் களத்தில் டோனியும், கேதர் ஜாதவும் இருந்தனர்.

இருவரும் அதிரடியாக விளையாடாமல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்தது. இருவரும் பெரும்பாலும் ஒவ்வொரு ரன்னாகவே எடுத்தனர்.

இருவரும் ஆடிய விதம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து இந்திய அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியதாவது:

ஒரே ஒரு போட்டியை தவிர மற்ற போட்டிகளில் டோனி மிகச்சிறப்பாகவே விளையாடினார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ரோகித்துடன் இணைந்து சிறப்பாக ஆடினார்.

பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் களம் இறங்கி நன்றாக விளையாடினார். வெஸ்ட் இண்டீசுடன் விளையாடும்போது அரை சதத்தினை கடந்து அதிரடியாக விளையாடினார்.

கடைசியாக இங்கிலாந்துடன் நடந்த போட்டியில், அந்த அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் அதிக ரன்கள் அடிக்க வேண்டியிருந்ததே, தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

டோனியின் ஆட்டம் எப்போதும் அணிக்கானதாகவே இருக்கும். அடிக்கடி டோனி குறித்த கடுமையான விமர்சனங்கள் மட்டும், அதிகமாக எழுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *