Tamilசெய்திகள்

தமிழக அரசின் ‘மக்களுடன் முதல்வர்’ – மனுக்கள் பெறப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன், தேர்தல் நேரத்தில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையை உருவாக்கி அனைத்து மனுக்களுக்கும் 100 நாளில் தீர்வு கண்டு சாதனை படைத்தார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை திறம்பட கையாண்டு அவற்றை நிறைவேற்றிடும் வகையில், முதல்வரின் முகவரி துறை என்ற தனித்துறையை உருவாக்க உத்தரவிட்டார். இதன் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 49 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றிற்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது.

தற்போது திராவிட மாடல் ஆட்சியில் மற்றுமொரு மைல்கல்லாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமே பொதுமக்களின் பிரச்சனையை குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பது தான். அதாவது மனுக்கள் வாங்கப்பட்டு 30 நாட்களுக்குள் அதற்கு தீர்வு காண வேண்டும்.

இந்த உன்னதமான திட்டத்தின் தொடக்க விழா கோவை மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உள்ள அரங்கில் நடைபெற உள்ள இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சிறு,குறு, நடுத்தர தொழில்கள் போன்ற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை பெறுவதற்கு மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும். முதற்கட்டமாக வருகிற 18-ந்தேதி முதல் வருகிற ஜனவரி 6-ந்தேதி வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 1,745 முகாம்கள் நடத்தப்படும்.

இந்த முகாம்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக, ஏனைய மாவட்டங்களில் நடத்தப்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முடிவுற்றவுடன், ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து ஜனவரி 31-ந்தேதி வரை மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

மக்களுடன் முதல்வர் திட்டம் முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் நடத்தப்படும். இந்த முகாம்கள் முடிவடைந்த பின்னர், அடுத்த கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரக பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்த ஆவன செய்யப்படும். இந்த முகாம்களில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், அனைவரும் ஒரே குடையின் கீழ் மக்களின் கோரிக்கைகளை பெற்று பதிவு செய்வார்கள்.

முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். முதலமைச்சர் இந்த திட்டத்தை கோவையில் தொடங்கி வைக்க கூடிய அதே நேரத்தில் அமைச்சர்கள் அவர்களுடைய மாவட்டங்களிலும், பொறுப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களிலும் இந்த முகாம்களை தொடங்கி வைக்க உள்ளனர்.

இந்த முகாம்களில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகள் கலந்து கொள்ள உள்ளனர். பொதுமக்கள் இந்த முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி உரிய சேவைகளை பெற்றுக்கொள்ளவும், துறை அலுவலர்கள் கோரிக்கைகளை அக்கறையோடு பரிசீலித்து அவர்களுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி, விரைவாகவும், எளிதாகவும் உரிய முறையில் தீர்வு காணவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.