Tamilசெய்திகள்

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி, வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் தமிழ்நாட்டில் கரூர், ஈரோட்டில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. மற்ற இடங்களில் 100 டிகிரியை ஒட்டி பதிவாகியது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் சராசரியாக பதிவான வெயில் அளவு குறித்த புள்ளி விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டு இருந்தது. அதில் கடந்த மாதத்தில் ஈரோட்டில் அதிகபட்ச வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் மட்டும் சராசரியாக 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்) வெயில் பதிவாகியுள்ளது.

அதற்கு அடுத்ததாக கரூரில் சராசரியாக 98.78 டிகிரி (37.1 செல்சியஸ்), சேலம் மற்றும் மதுரையில் சராசரியாக 97.34 டிகிரி (36.3 செல்சியஸ்), அதனைத்தொடர்ந்து திருச்சி, திருப்பத்தூர், பாளையங்கோட்டை, கோவை, வேலூர், தர்மபுரி, திருத்தணி, தஞ்சாவூர் உள்பட மாவட்டங்களில் 90 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

குறைந்தபட்சமாக ஊட்டியில் சராசரியாக 71.24 டிகிரி (21.8 செல்சியஸ்), கொடைக்கானலில் சராசரியாக 65.84 டிகிரி (18.8 செல்சியஸ்) பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் இந்த மாதத்திலும், அடுத்த மாதத்திலும் இயல்பைவிட சற்று வெப்பம் அதிகரித்து இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

மழையை பொறுத்தவரையில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) வரையிலான 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.