Tamilசெய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் சிக்கியுள்ள பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இலவச பேருந்து ஏற்பாடு

தென் மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கடந்த 2 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலில் சிக்கி உள்ள பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப அரசு சார்பில் சிறப்பு இலவச பேருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு இலவச பேருந்துகள் மதுரை, திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை, வெள்ளத்தால் திருச்செந்தூர் கோவிலில் 3 நாட்களாக பக்தர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். திருச்செந்தூர் கோவிலில் உள்ள பக்தர்களுக்கு 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

3 நாட்களுக்கு பின் திருச்செந்தூரில் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.