Tamilசெய்திகள்

துபாய் முதலீட்டார் மாநாடு – ரூ.1600 கோடி முதலீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று துபாயில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு தொழில் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

இந்த முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.1600 கோடி முதலீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னலையில் 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், இரும்பு குழாய் தயாரிக்கும் நிறுவனத்துடன் ரூ.1000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உலகின் அழகான நகரமான துபாய் நகரம் வணிகத்திலும் சிறந்து விளங்குவதாகவும், ஏற்றுமதியின் பெரிய நுழைவு வாயிலாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.

“தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய ஏராளமான வாயப்புகள் உள்ளன. உலகளவில் பொருளாதார மேம்பாட்டு மையமாக தமிழ்நாட்டை மேம்படுத்துவதே எங்களின் குறிக்கோள். தமிழ்நாட்டில் உலகத்தரத்தில் உள்கட்டமைப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வணிகம் செய்ய வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன். தமிழ்நாடு- துபாய் இடையே பொருளாதார உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.