Tamilசினிமா

நடிகர் வடிவேலு முதலமைச்சரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கினார்

கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் என ஏராளமான திரைப்பிரபலங்கள் நிதியுதவி வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு, கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் வடிவேலு.

முதல்வர் உடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துவதாக தெரிவித்தார். மேலும் கருணாநிதியை போல் சிறப்பாக ஆட்சி செய்து, தந்தையின் பெயரை ஸ்டாலின் காப்பாற்றி வருவதாகவும் வடிவேலு கூறினார்.