Tamilவிளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 2-2 என சமனிலை ஆனது. அடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தும், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி லண்டனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி 124 பந்தில் 182 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 96 ரன்னில் அவுட்டானார். ஜோஸ் பட்லர் 38 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட்டும், பென் லிஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கிளென் பிலிப்ஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 72 ரன் சேர்த்தார். ரச்சின் ரவீந்திரா 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், நியூசிலாந்து 39 ஓவரில் 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது. பென் ஸ்டோக்சுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.