Tamilசெய்திகள்

நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டது

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு கடந்த மாதம் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, சுமார் 89,342 பேர் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகளை பரிசீலனை செய்த ஆய்வுக்குழு, பல கட்ட ஆலோசனைகளை நடத்தியது.

இந்நிலையில், ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக்குழு நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

நீட் ஆய்வுக்குழுவுக்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி ஆன நிலையில் முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.