Tamilசினிமா

பண மோசடி விவகாரம் – நடிகை நமீதாவின் கணவருக்கு சம்மன்

சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக MSME புரொமோஷன் கவுன்சிலிங் என்ற அமைப்பின் பெயரில் நிறுவன உறுப்பினர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த அமைப்பின் தேசிய தலைவரான மதுரை, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துராமன், அமைப்பின் தேசிய செயலாளரான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ் மற்றும் தமிழகத்தின் தலைவராக இருந்த நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டு சிறு, குறு தொழில் நிர்வாகிகளுடன் மத்திய அரசு கடன் விவகாரம் குறித்து பேசினார்கள்.

இதில், சிறப்பு அழைப்பாளராக நமீதாவும் கலந்து கொண்டார். இதன் பேனரில் இந்திய அரசின் அசோக முத்திரை பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும், கவுன்சிலிங் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் இந்திய அரசின் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தியதோடு தேசிய கொடியை வாகனத்தில் பொருத்தியிருந்தது குறித்து புகார் எழுந்தது.

மேலும், சேலம், ஜாகீர் அம்மா பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபால் சாமி என்பவர் ரூ.41 லட்சம் பணத்தை தன்னிடம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் மீது புகார் அளித்திருந்தார். இது குறித்து சேலம் சூரமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி அந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், இந்த அமைப்பின் தலைவரும், செயலாளரும் பணம் வாங்கிக் கொண்டு பல மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்த கோபால் சாமி, தமிழக தலைவர் பதவியை வாங்குவதற்காக நடிகை நமீதாவின் கணவர் ரூ.4 கோடி வரை பணம் கொடுத்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் தற்போது நமீதாவின் கணவர் மற்றும் முத்துராமின் உதவியாளர் மஞ்சுநாத் ஆகிய இருவரும் இன்று இரவு ஆஜராகும் படி சூரமங்கலம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை மஞ்சுநாத் மற்றும் நடிகை நமீதாவின் கணவர் இருவரும் ஆஜராகவில்லை. இது தொடர்பாக காவல் துறையின் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.