Tamilசெய்திகள்

பா.ஜ.க அலுவலகம் முன்பு திரண்ட மக்களை கலைக்க கண்ணீர் குண்டுகள் வீச்சு – மணிப்பூரில் பரபரப்பு

மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், பழங்குடி பிரிவினருக்கும் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் மாநிலம் சென்றார். இம்பால் நகரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள பா.ஜ.க.வின் பிராந்திய அலுவலகம் அருகே நேற்றுமாலை ஏராளமானோர் திரண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி கலைக்க போலீசார் பல சுற்று கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. கூட்டம் கலைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.