Tamilசெய்திகள்

புதுவையில் தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு

புதுவை அரசு, பிரெஞ்சு தூதரகத்துடன் இணைந்து தொழில்துறை வளர்ச்சிக்கு தொழில்முனைவோர் மாநாட்டை நடத்தியது.

இந்த மாநாடு அண்ணாசாலையில் உள்ள தனியார் ஒட்டலில் நடந்தது.

முதல்-அமைச்சர் ரங்கசாமி, பிரெஞ்சு தூதர் லிசே டால்பட் ஆகியோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர். மாநாட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும். அதை உருவாக்கி தர வேண்டும் என்பதே அரசின் எண்ணம். புதுவையில் அதற்கான சூழல் உள்ளது. தொழில் தொடங்க தேவையான வசதிகளை விரைவாக செய்து தரவேண்டும். விண்ணப்பித்த ஒரு சில நாட்களிலேயே மின்துறை உட்பட்ட அனைத்து துறைகளிலும் உரிமம் கிடைக்கவேண்டும். இதற்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் புதுவை அரசு அளிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், பெஸ்ட் புதுவை என்பது பிரதமரின் எண்ணம். மத்திய அரசு உதவியுடன் தொழில்துறையில் முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பொருளாதாரத்தை மேம்படுத்த பல நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக மெடிக்கல் டூரிசம், மருந்துகள் தயாரிப்பு, ஸ்டார்ட் அப்ஸ் உட்பட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்துகிறோம். புதுவையில் இத்தொழில்களை தொடங்க முதலீடு செய்யலாம் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் 80 பிரெஞ்சு மற்றும் இந்திய நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.