Tamilவிளையாட்டு

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து – நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறியது

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இரண்டு அணி வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஸ்பெயின் வீராங்கனைகள் இலக்கை நோக்கி பந்து கடத்தி சென்றனர். இருந்தாலும் முதல் பாதி நேர ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்திலும் கோல் அடிக்க முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி அந்த அணியின் மரியானோ கால்டென்டே கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

பிறகு 90 நிமிடம் வரை நெதர்லாந்து அணியால் கோல் அடிக்க முடியவில்லை. காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூடுதல் நேரம் வழங்கப்படும். அந்த நேரத்தில் (91-வது நிமிடம்) நெதர்லாந்து வீராங்கனை ஸ்டெபானி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.

நாக்அவுட் போட்டி என்பதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. தலா 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. முதல் 15 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கூடுதல் நேரத்தில் ஆட்டத்தின் 111-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை சல்மா செலிஸ்டெ பராலுயெலோ அயுங்கோனா கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 2-1 என முன்னிலைப் பெற்றது.

அதன்பின் ஆட்டம் முடியும் வரை நெதர்லாந்து வீராங்கனைகளால் கோல் அடிக்க முடியவில்லை. எனவே, ஸ்பெயின் 2-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணிக்கு 8 முறையும், நெதர்லாந்து அணிக்கு 2 முறையும கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

நெதர்லாந்து வீராங்கனைகள் இரண்டு முறை ஆஃப்சைடு, ஸ்பெயின் வீராங்கனைகள் ஆஃப்சைடு செய்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இலக்கை நோக்கி ஸ்பெயின் 8 முறையும், நெதர்லாந்து 4 முறையில் பந்தை அடித்தன. பந்து 62 சதவீதம் ஸ்பெயின் வசமே இருந்தது.