Tamilசெய்திகள்

பெண் கவுன்சிலரின் 6 வயது குழந்தையை கொஞ்சிய ராகுல் காந்தி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி முடிந்தபின்பு ராகுல் காந்தி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்ததோடு, கட்சியை வளர்ப்பது குறித்தும் கலந்துரையாடினார்.

காங்கிரஸ் கவுன்சிலர்களிடம் அவர் பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமி, ராகுல் காந்தியை நோக்கி கை அசைத்தப்படி இருந்தார்.

இதனை கண்ட ராகுல்காந்தி, அந்த சிறுமியை தன் அருகே அழைத்தார். பின்னர் அந்த சிறுமியை தன் மடியில் அமர வைத்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார்.

பின்னர் அந்த சிறுமிக்கு சாக்லெட் கொடுத்ததோடு அவருடன் ராகுல் காந்தி செல்பி எடுத்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு, சிறுமியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை ராகுல் காந்தி இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

அதில் சென்னை கூட்டத்தில் எனக்கு கிடைத்த புதிய நண்பர் பிரீப்ளின் சுரேஷ். எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்தார், என்று குறிப்பிட்டு இருந்தார்.

ராகுல் காந்தியின் பதிவை பார்த்த பலரும், அவருடன் இருக்கும் சிறுமி யார்? என்று தேட தொடங்கினர். இதில் அந்த சிறுமி குமரி மாவட்டம் , முன்சிறை யூனியன் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் சாந்தினியின் மகள் பிரீப்ளின் சுரேஷ் என தெரிய வந்தது.

ஒரே நாளில் தமிழகத்தின் தென் எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த சிறுமி புகழின் உச்சத்திற்கு சென்றதும், அவரை பற்றிய விபரங்களை பலரும் கேட்டறிந்ததும் அவரது பெற்றோருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்தது. இதுபற்றி சாந்தினியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

நான் குமரி மாவட்டம் முன்சிறை பஞ்சாயத்து யூனியனில் இருந்து கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எனது கணவர் சுரேஷ். எங்களின் மகள் பிரீப்ளின். 6 வயதே ஆகும் அவர் வேங்கோடு பகுதியில் உள்ள பள்ளியில் யூ.கே.ஜி.படித்து வருகிறார்.

சென்னையில் ராகுல் காந்தி பங்கேற்கும் கூட்டத்திற்கு வரவேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர். இதற்காக சென்னைக்கு நான் மட்டுமே செல்ல இருந்தேன். இந்த கூட்டத்திற்கு ராகுல் காந்தியும் வருகிறார் என்பதை கேட்டதும் எனது மகள், என்னுடன் சென்னை வருவதாக கூறினார்.

நான் வேண்டாம் என மறுத்தப்பின்னரும் அடம்பிடித்து என்னுடன் வந்தார். இங்கு வந்தபின்பு கூட்டத்தில் இருந்தபடி ராகுல் காந்தியை நோக்கி கை அசைத்தபடி இருந்தார். மேடையில் இருந்தபடி இதனை கவனித்த ராகுல், எனது குழந்தையை தன் அருகே வருமாறு அழைத்தார்.

இதனை நான் சற்றும் எதிர்ப்பார்க்க வில்லை. குழந்தை அவர் அருகே சென்றதும், மடியில் அமர்த்தி கொண்டார். என் குழந்தையிடம் என்ன படிக்கிறாய்? எப்படி படிக்கிறாய்? நன்றாக படிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

பின்னர் செல்பி எடுத்த தோடு, குழந்தைக்கு சாக்லெட்டும் கொடுத்தார். இப்போது என் குழந்தையை நண்பர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரமாக கருதுகிறோம். இந்த பெருமையை தந்த ராகுல் காந்திக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன். இப்போது தான் நான் சென்னையில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருக்கிறேன். அதற்குள் நூற்றுக் கணக்கானோர் எனக்கு போன் செய்து கேட்டபடி உள்ளனர். இது பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.