Tamilசெய்திகள்

மது போதையில் பாடம் எடுத்த பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்!

கர்நாடகாவில் குடிபோதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் துமாகூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியையான கங்கா லக்ஷ்மம்மா என்பவர், பள்ளியில் மதுபாட்டிலைக் கொண்டு வந்து, மது அருந்தியபடி பாடம் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கண்டித்தும், அதனை கங்கா லக்ஷ்மம்மா கண்டுகொள்ளவில்லையாம்.

தொடர்ந்து மது குடித்துவிட்டு பாடம் எடுத்து வந்ததால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பள்ளிக்கு வருகை தந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும், கங்கா லக்ஷ்மம்மாவின் வகுப்பறைக்கு சென்ற அவர்கள், வகுப்பறையில் சோதனை செய்தனர்.

அப்போது, மேசை டிராயரில் மதுபாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. அவரும் குடிபோதையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்த கல்வித்துறை அதிகாரிகள், பின்னர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.