Tamilசினிமா

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் கெளதம் மேனன்

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படம் இன்று (நவம்பர் 24) ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இதற்கிடையே, சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க கவுதம் மேனன், ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.40 கோடியை பெற்றுள்ளதாகவும், ஆனால், படத்தையும் முடிக்கவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை என அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, “ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை இன்று காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்க வேண்டும் அவ்வாறு திரும்ப வழங்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் கவுதம் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மன்னிக்கவும். இன்று ‘துருவ நட்சத்திரம்’ படத்தை திரைக்கு கொண்டு வரமுடியவில்லை. நாங்கள் எங்களால் ஆன முயற்சிகளை செய்தோம். ஆனால் எங்களுக்கு இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுவது போல தெரிகிறது. உலகம் முழுக்க, அட்வான்ஸ் புக்கிங் மற்றும் முறையான திரைகள் வழியாக அனைவருக்கும் நல்ல அனுபவத்தை தருவோம் என்று நம்புகிறேன். படத்துக்கு கிடைக்கும் ஆதரவும் மகிழ்ச்சியும், எங்களை தொடர்ந்து இயங்கவும் வைத்தது. இன்னும் கொஞ்ச நாட்கள்தான். நாங்கள் வருகிறோம்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.