Tamilசெய்திகள்

ரூ.85 தாண்டிய பெட்ரோல் விலை! – மக்கள் அவதி

சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. ஆனால், மத்திய அரசு தான் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத வகையில் சென்றுகொண்டிருக்கிறது.

எண்ணெய் நிறுவனங்கள் தினமும் விலை உயர்த்தி வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் 15 காசுகள் என விற்பனை ஆனது. இந்நிலையில் முந்தைய நாள் விலையை காட்டிலும் இன்று 16 காசுகள் உயர்ந்து, 85 ரூபாய் 31 காசுகள் என பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், டீசலின் விலையும் அதிகரித்தது. நேற்று ஒரு லிட்டர் டீசல் 77 ரூபாய் 94 காசுகள் என விற்பனை ஆனது. இன்று டீசலின் விலை 6 காசுகள் உயர்ந்து, 78 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் கடந்த 7-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாய் 13 காசுக்கும், டீசல் 76 ரூபாய் 17 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. 10 நாட்களுடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரையிலும், டீசல் விலை 1 ரூபாய் 71 காசு வரையிலும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல்-டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *