Tamilவிளையாட்டு

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா பெயர்

இந்திய அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேனாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரை ‘சின்ன தல’ என சிஎஸ்கே வீரர்கள் செல்லமாக அழைத்தனர்.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா, இலங்கையில் நடைபெற இருக்கும் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாட விரும்பினார். இதனால் ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் செய்தார். ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றது.

நேற்று ஏலம் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவாக பிரிக்கப்பட்டு வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள். இவரது பெயரும் ஏலப்பட்டியலில் இருந்ததால், இந்தியாவில் லங்கா பிரீமியர் லீக்கை பிரபலப்படுத்த இவர் விளையாடுவது ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது.

ஆனால், ஒவ்வொரு வீரர்களின் பெயர்களையும் ஏலம் விடுபவர் வெளியிட்டு ஏலத்தை ஆரம்பித்தார். ஆனால், சுரேஷ் ரெய்னாவின் பெயரை அவர் வெளியிடவில்லை. சுரேஷ் ரெய்னா பெயர் புறக்கணிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏலம் விடும் நபர் தவறுதலாக சுரேஷ் ரெய்னா பெயரை தெரிவிக்காமல் விட்டாரா? அல்லது சுரேஷ் ரெய்னா ஏலத்தில் இருந்து விலகினாரா? என்பதை சுரேஷ் ரெய்னாவும், லங்கா பிரீமியர் லீக் நிர்வாகமும் வெளிப்படுத்தினால் தான் தெரியவரும்.

எப்படி இருந்தாலும் லங்கா பிரீமியர் லீக் ஒரு சிறந்த வீரர் மற்றும் சிஎஸ்கே ரசிகர்களின் ஆதரவு ஆகியவற்றை தவறவிடுகிறது என்றால் மிகையாகாது.