Tamilவிளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையர் போட்டி – சானியா மிர்சா, பத்தானி ஜோடி முதல் சுற்றில் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்று மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா முதல் சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

அமெரிக்க வீராங்கனை பெத்தானி மாட்டெக்குடன் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார் சானியா. இன்றைய முதல் சுற்று ஆட்டத்தில் சானியா-மாட்டெக் ஜோடி, 7-5, 6-3 என்ற நேர் செட்களில் அலெக்சா-டிசைரி ஜோடியை தோற்கடித்து, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. சானியாவுக்கு இது 121வது வெற்றியாகும்.

இந்த மாத இறுதியில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில், சானியா மிர்சாவின் ஆட்டத்திறன் இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கும். சானியா மிர்சா தனது தரவரிசையை 9-வது இடத்தில் தக்கவைத்ததால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார். அங்கிதா ரெய்னாவுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் விளையாட உள்ளார்.

விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி, 6-7(6), 4-6 என்ற செட்கணக்கில் எட்வார்ட் ரோஜர்-வாஸலின் ஹென்றி ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, சானியா மிர்சாவுடன் இணைந்து விளையாட உள்ளார்.