Tamilவிளையாட்டு

விராட் கோலிக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பாலி வர்க்கீஸ். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலரும் பணத்தை இழந்து வருகின்றனர். பல தற்கொலை சம்பவங்களும் நடந்துள்ளன. பல மாநிலங்கள் இந்த விளையாட்டை கட்டுப்படுத்தி உள்ளன. கேரளாவில் கடந்த 1960-ம் ஆண்டிலேயே, இதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது.

ஆனால் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளம்பரங்கள் மூலம் சமூகத்தில் செல்வாக்கு உள்ள பிரபலங்கள் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் அதிகளவில் கவரப்படுகின்றனர்.எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை சட்டப்படி தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா, மலையாள நடிகர் அஜூ வர்க்கீஸ் மற்றும் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.