Tamilவிளையாட்டு

விராட் கோலியின் ஓவியத்தை வரைந்து பரிசளித்த இலங்கை பெண் ரசிகை

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகை ஒருவர் விராட் கோலியை பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் இலங்கை பெண் ரசிகை ஒருவர் விராட் கோலி மீதான தனது அன்பை புதுமையான முறையில் வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா மோதும் ஆட்டத்திற்கு இந்திய வீரர்கள் தயாராகி கொண்டு இருந்த வேளையில் கொழும்பை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விராட் கோலியை சந்தித்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பெண், கடந்த 14 வருடங்களாக உங்களிடம் பேச காத்திருந்தேன். இத்தனை வருடங்களுக்கு பிறகு எனது கனவு நனவாகி விட்டது என கூறினார்.

மேலும் அந்த பெண் ரசிகை தான் வரைந்த விராட் கோலியின் ஓவியத்தை அவருக்கு பரிசாக கொடுத்தார். அந்த ரசிகையின் பரிசை பெற்றுக்கொண்ட கோலி அவருக்கு நன்றி தெரிவித்தார். இதே போல ஏராளமான இலங்கை ரசிகர்களும் கோலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.