Tamilசெய்திகள்

வெற்றிகரமாக நடந்து முடிந்த ஜி20 மாநாடு – இந்தியாவை பாராட்டும் பாகிஸ்தானியர்கள்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒருமித்த கருத்தோடு ஜி20 டெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோரை தவிர்த்து அனைத்து தலைவர்களும் டெல்லியில் கூடியிருந்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய பிரதமர் மோடி 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுடன், இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் வாழ்த்து, நன்றி தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ”நாட்டிற்கு உலகின் டாப் 20 தலைவர்கள் வருகை தரும் போது, அது அந்த நாட்டிற்கு பெருமை. இதன்மூலம் இந்திய பொருளாதாரம் இன்னும் அதிக பயனடையும்” என்றார்.

மற்றொரு நபர் ”அண்டை நாடான இந்தியா தலைமை ஏற்று, ஜி20 மாநாட்டை நடத்தியுள்ள நிலையில், நாங்கள் வெளிநாடு கொள்கையில் தோல்வியடைந்ததாக நினைக்கிறேன். பாகிஸ்தானில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பொருளாதாரம், பாதுகாப்பு நிலை மோசம் அடைந்துள்ளது” என்றார்.

இன்னொருவர் ”இன்று நாங்கள் எங்களுடைய பொருளாதாரத்தை பாதுகாக்க முயற்சி செய்யும் போது, இந்தியா ஜி20 தலைவர்களை வரவழைத்து மாநாட்டை நடத்தியுள்ளது. இந்தியா சிறந்த அடியை எடுத்து வைத்துள்ளது. இந்தியர்களுக்கு இது பெருமையளிக்கும் தருணம்” என்றார்.