Tamilவிளையாட்டு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 வது டி20 போட்டி – இந்தியா வெற்றி

வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.

பிராண்டன் கிங் 42 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் ரோவ்மென் பாவெல் 19 பந்தில் 40 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, இந்திய அணி 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னிலும், சுப்மன் கில் 6 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதனால் இந்தியா 34 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவருக்கு திலக் வர்மா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

அதிரடியாக ஆடிய சூர்யகுமார் அரை சதம் கடந்தார். 3வது விக்கெட்டுக்கு இணைந்த சூர்யகுமார் யாதவ் – திலக் வர்மா ஜோடி 87 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 44 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மாவுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், இந்தியா 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா 49 ரன்னும், பாண்ட்யா 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது.