Tamilசெய்திகள்

9 வயது சிறுமி பாலியல் கொலை – 600 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகையை தயார் செய்த புதுச்சேரி போலீஸ்

புதுச்சேரி, முத்தியால் பேட்டை, சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மாதம் 2-ந் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தால் புதுவை முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த படுகொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த கஞ்சா ஆசாமிகளான விவேகானந்தன் (57) மற்றும் கருணாஸ் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவ்வழக்கில் தடவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தில் சேகரித்த தடயங்கள், குற்றவாளிகளின் கைரேகைகள் மற்றும் ரத்த பரிசோதனை அறிக்கை, தடயவியல் ஆய்வு பரிசோதனை, டி.என்.ஏ. மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

போக்சோ வழக்குகளில் 60 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். எனவெ சிறுமி பாலியல் கொலை வழக்கில் சிறப்பு விசாரணை குழு வினரும், கிழக்கு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் லட்சுமி தலைமையில் முத் தியால்பேட்டை போலீ சாரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் சிறுமி கொலை வழக்கு குற்றப்பத்திரிகையை போலீசார் தயாரித்து முடித்துள்ளனர்.

இவ்வழக்கு விசாரணையை டி.ஜி.பி.ஸ்ரீனிவாஸ் நேரடியாக கவனித்து வரும் நிலையில் சுமார், 600 பக்க விசாரணை அறிக்கை டி.ஜி.பி. மற்றும் சட்டத்துறையின் ஆலோசனை பெற அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் ஆலோசனை பெற்றவுடன் திருத்தங்கள் ஏதேனும் வந்தால், அதன்படி திருத்தங்கள் மேற் கொண்டு உடனே போக்சோ விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர்.