இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி சீர்குலைக்க பா.ஜ.க அரசு முடிவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்ட இன்று கருப்பு நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்த 130வது அரசமைப்புத் திருத்த மசோதா சீர்திருத்தம் அல்ல, ஒரு கருப்பு மசோதா. இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி, அரசியலமைப்பையும் அதன் ஜனநாயக அடித்தளத்தையும் சீர்குலைக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
விசாரணை, தீர்ப்பு என எதுவுமே இல்லாமல் 30 நாட்கள் கைதாகி இருந்தாலே பதவி நீக்கம் என்பது கருப்பு சட்டம். வாக்குத்திருட்டு, எதிரணியை அமைதியாக்குதல், மாநிலங்களை நசுக்குதல் என சர்வாதிகாரம் இப்படித்தான் தொடங்கும்.
போட்டியாளர்களை கைது செய்து பதவியில் இருந்து நீக்கும் அதிகாரத்தை தனக்குத்தானே வழங்குவதைத்தான் வளர்ந்து வரும் சர்வாதிகாரிகள் முதலில் செய்வார்கள். இம்மசோதா அதைத்தான் செய்ய முயல்கிறது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
