மருதமலை முருகன் கோவிலில் செல்போன் பேச, புகைப்படம் எடுக்க நாளை முதல் தடை!
கோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படைவீடு என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
குறிப்பாக விசேஷ நாட்களில் மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்கள் மலைப்பாதை வழியாக வாகனங்களிலும், படிக்கட்டுகள் வழியாகவும் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு, கோவில் முன்புள்ள கொடிமரம், ராஜகோபுரம் முன்பு நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து செல்வர்.
இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் நாளை முதல் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் எடுக்கவும் தடைவிதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்ச் 10-ந் தேதி (நாளை) முதல் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் இருந்து ஆதிமூலவர் சன்னதி, சுப்பிரமணியசுவாமி சன்னதி, பாம்பாட்டி சித்தர் சன்னதி உள்பட அனைத்து சுவாமி சன்னதிகள் மற்றும் கோவில் வளாகத்திற்குள் செல்போன் பேசவும், புகைப்படம் எடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே பக்தர்கள் அனைவரும் கோவில் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் நுழைவதற்கு முன்பு தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்ய ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கோவிலில் பக்தர்கள் பயன்படுத்துவதற்காக லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் பயணித்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் லிப்ட்டில் பயணிக்க கோவில் நிர்வாகம் நேற்றுமுதல் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி லிப்ட்டில் பயணிக்க பக்தர் ஒருவருக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
