Tamilசெய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாத பயம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது – துணை நிலை ஆளுநர்

ஜம்மு-காஷ்மீர் மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, இந்திய வர்த்தக சம்மேள உறுப்பினர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அனந்த்நாக் மற்றும் புல்வாமா போன்ற மாவட்டங்களில் முதலீடுகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீநகரை விட புல்வாமாவில் அதிகமான தொழில்துறை யுனிட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பயங்கிரவாதிகள் மற்றும் அவர்களுடைய சூழ்நிலைகள் குறித்த பயம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.

Har Ghar Tiranga பிரசாரத்தின்போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தியக் கொடியுடன் வந்தனர், உலகமே அதைப் பார்த்தது. ஷோபியன் மற்றும் புல்வாமாவில் உள்ள பல கிராமங்களில் காவல்துறையினரோ அல்லது அரசு அதிகாரிகளோ செல்வதில்லை. இப்போது, அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பங்கேற்கின்றனர்.

உள்ளூர் பயங்கரவாத ஆட்சேர்ப்பு இல்லாத நிலையை எட்டுகிறது. இந்த வருடம் தற்போது வரை ஒரேயொரு சம்பவம் மட்டுமே நடைபெற்றுள்ளது. ஒரு காலத்தில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் கல் வீசுதல் நடந்தது. ஆனால் இப்போது அது வரலாறாகிவிட்டது. ஒரு காலத்தில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டால், முழு பள்ளத்தாக்கும் மூடப்பட்டிருக்கும். பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கும். அந்த நிலை முடிவுக்கு வந்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிராக எப்படி நின்றார்கள் என்பதை, ஐந்து ஆண்டுகளில் நான் பார்த்ததில்லை. பெரும்பாலான பெரியோர்கள் இதுபோன்ற ஒன்றைப் பார்த்ததில்லை என்று சொன்னார்கள். ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன், அந்த மாற்றத்திற்கு பின்னால் முழு நாடும் உள்ளது.

இவ்வாறு துணைநிலை ஆளுநர் பேசினார்.