Tamilசெய்திகள்

ஆண்டுதோறும் 8,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்விசார் உதவிகளை வழங்கும் ராஜஸ்தான் இளைஞர் சங்கம்!

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்களைவழங்கும் ஆறு தலைமுறை கால முயற்சியைத் தொடர்ந்து, ராஜஸ்தான் இளைஞர் சங்கம் (RYA) தனது 63-வது ஆண்டு புத்தக விநியோக விழாவை இன்று சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அரங்கில் நடத்தியது. இவ்விழாவை இலங்கையின் துணை உயர் ஆணையர்திரு. ஜி. எல். ஞானதேவா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியின் செயலாளர் திரு. அசோக் குமார் முந்த்ரா மற்றும் மெட் கோட் சர்வீஸ் இன்க். (Med Code Service Inc.) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ராஜேஷ் சுரனா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின்போது, RYA புத்தக வங்கியின் முன்னாள் தலைவர் திரு. கௌதம்சந்த் ஜெயின் அவர்கள் சிறப்பிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்து மற்றும் பிரார்த்தனையுடன்கொண்டாடப்பட்டது.

ராஜஸ்தான் இளைஞர் சங்கத்தின் (Rajasthan Youth Association) தலைவர் விவேக் போம்ப், கூடியிருந்தவர்களை வரவேற்றுப் பேசுகையில் கூறியதாவது:

“பாடப்புத்தகங்களுக்கான செலவு காரணமாக, தகுதியுள்ள எந்தவொரு மாணவரும் கல்வியை இழக்க நேரிடக்கூடாது என்பதை உறுதி செய்வதே ‘புத்தக வங்கித் திட்டத்தின்’ (Book Bank Project) எளிய நோக்கமாகும். ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட இத்திட்டம், இன்று கல்விக்கான தடைகளை நீக்கி, ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகளை வளர்க்கும் ஒரு மக்கள் இயக்கமாக வளர்ந்துள்ளது. எங்கள் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் தொடர்ச்சியான ஆதரவால், கடந்த 63 ஆண்டுகளில் 1.60 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த எங்களால் முடிந்துள்ளது; வரும் ஆண்டுகளிலும் இம்முயற்சியை மேலும் விரிவுபடுத்த நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.”

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை உயர் ஆணையரகத்தின்வர்த்தக அமைச்சர் திரு. ஜி. எல். ஞானதேவா அவர்கள், “கல்வி என்பது எதிர்காலத்திற்கான மிக மதிப்புமிக்க முதலீடுகளில்ஒன்றாகும். ராஜஸ்தான் இளைஞர் சங்கத்தின் புத்தக வங்கித் திட்டம் போன்ற முயற்சிகள், பொருளாதாரக்கட்டுப்பாடுகள்மாணவர்களின்கல்விக்குதடையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்கின்றன. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்த அமைப்பு ஆயிரக்கணக்கான தகுதியான மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்கி, சமூக முன்னேற்றத்திற்கும் எதிர்கால தலைமுறைகளைஊக்குவிப்பதற்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் ராஜஸ்தான் இளைஞர் சங்கத்தை மனமாரப் பாராட்டுகிறேன். இன்று புத்தகங்களைப் பெறும் அனைத்து மாணவர்களும் தங்கள் கல்விப்பயணத்தில் சிறந்து விளங்கி, வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்.

இத்திட்டத்தின் தொலைநோக்கு மற்றும் சிறப்பம்சங்கள் குறித்துப் பேசிய ‘புக் பேங்க்’ (Book Bank) தலைவர் பிபின் எம். ஜெயின், 2026-27 ஆம் ஆண்டிற்கான அறிக்கையைச் சமர்ப்பித்தார். சாதி, இனம் அல்லது மதம் ஆகியவற்றைக் கடந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், காட்சிமூலம்(visual presentation) ‘புக் பேங்க்’கின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விளக்கினார்.

சிறப்பு விருந்தினர்களான திரு. அசோக் குமார் முந்த்ரா மற்றும் ராஜேஷ் சுரனா ஆகியோர் தங்கள் உரையின் மூலம் மாணவர்களை ஊக்குவித்ததுடன், 1964-ஆம் ஆண்டு முதல் RYA புத்தக வங்கி (RYA Book Bank) ஆற்றி வரும் பணிகளையும் பாராட்டினர்.

இந்நிகழ்வில் விருந்தினர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். செயலாளர் திரு. விகாஸ் மார்டியா நன்றியுரை ஆற்றினார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.