ரஷ்யப் பெண்களுடன் உறவு இருந்தது உண்மை – மன்னிப்பு கேட்ட பில்கேட்ஸ்
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார். கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பில்கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீனுக்கு இடையிலான பல சந்திப்புகளை விவரிக்கும் படங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கேட்ஸைச் சுற்றி பல விமர்சனங்கள் எழுந்தன. ஆவணங்களில் பில் கேட்ஸ், முகங்கள் மறைக்கப்பட்ட பெண்களுடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் பொது மன்னிப்பு கோரி உள்ளார். இதுதொடர்பாக, அறக்கட்டளை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
சமீபத்திய டவுன் ஹால் கூட்டத்தின்போது பில்கேட்ஸ் தனது செயல்களுக்குப் பொறுப்பேற்றார். அங்கு அவர் எப்ஸ்டீனுடனான தனது உறவுகளைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கு பதிலளித்தார். டவுன் ஹாலில் எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ரஷிய பெண்களுடன் தனக்கு இரண்டு உறவுகள் இருந்ததாக ஒப்புக் கொண்ட பில் கேட்ஸ், அந்த உறவுகள் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையது இல்லை என தெளிவுபடுத்தினார்.
எப்ஸ்டீனுடன் நேரத்தைச் செலவிட்டதும், மூத்த அறக்கட்டளை நிர்வாகிகளை அவருடன் சந்திப்புகளில் ஈடுபடுத்தியதும் ஒரு பெரிய தவறு எனக்கூறிய பில்கேட்ஸ், நான் செய்த தவறு காரணமாக இதில் ஈர்க்கப்பட்ட மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.
2014 வரை எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும், எப்ஸ்டீனுடன் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பறந்ததாகவும், ஜெர்மனி, பிரான்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் அவருடன் நேரத்தைச் செலவிட்டதாகவும் பில்கேட்ஸ் கூறினார். நான் ஒருபோதும் எப்ஸ்டீனின் தீவுக்குச் சென்றதில்லை என்பதை உறுதிபடுத்தினார் என தெரிவித்துள்ளது.
