Tamilசெய்திகள்

தமிழகம் முழுவதும் குடல் ரத்தக்கசிவுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை தொடங்கும் காவேரி மருத்துவமனை!

செரிமான மண்டலத்தின் உட்புறத்தில் ஏற்படும் ரத்தக்கசிவானது, ஒரு பொதுவான அவசர மருத்துவ பாதிப்பு நிலையாகும். இதற்கு சரியான நேரத்திற்குள் பரிசோதனை, ஒருங்கிணைந்த பராமரிப்பு மற்றும் இரத்தக்கசிவை சரிசெய்வதற்கு விரிவான சிகிச்சை அளிப்பதற்காக, காவேரி மருத்துவமனை குழுமம் தமிழ்நாட்டில் உள்ள தனது அனைத்து மருத்துவமனைகளிலும் பிரத்யேக ‘ஜிஐ ப்ளீடு’ சிகிச்சை மையங்களை தொடங்கியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள காவேரி குழுமத்தின் மருத்துவமனைகளிலும் இந்த மையங்கள் செயல்படும். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள 12 மருத்துவமனைகள் மூலம், குடல் இரத்தக்கசிவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே தனிச்சிறப்பான, பல்துறைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவப் பராமரிப்பை பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

இந்த சிறப்பு சிகிச்சை மையங்கள், அவசர சிகிச்சை மருத்துவர்கள், இரைப்பை-குடல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், கதிரியக்க நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் சிகிச்சை அளிக்கின்றன. அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நோயாளி வந்து சேர்வது முதல், ஆபத்தை மதிப்பீடு செய்தல், தீவிர சிகிச்சை பிரிவு (ICU) அல்லது வார்டில் அனுமதித்தல், எண்டோஸ்கோபி அல்லது கதிரியக்க சிகிச்சைகள் அளித்தல் மற்றும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவது வரை, நோயாளிகள், தெளிவாக வரையறை செய்யப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மிகச் சரியான முறையில் பராமரிப்பை பெறுகின்றனர்.

இந்த மையங்களில் 24/7 அவசர எண்டோஸ்கோபி சேவைகள் மற்றும் ஊசி சிகிச்சை, பேண்ட் லிகேஷன், பசை சிகிச்சை மற்றும் காய்ல் எம்பலைசேஷன் உள்ளிட்ட மேம்பட்ட எண்டோஸ்கோபி சிகிச்சை வசதிகள் உள்ளன. தேவைப்படும்போது, ரத்தக்கசிவை நிறுத்த கதிரியக்க சிகிச்சைகளும் மற்றும் சிக்கலான பாதிப்புகளுக்கு நிபுணத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சை பெறும் இம்மையங்களில் மேற்கொள்ளப்படும்.

இந்த சிகிச்சை மையத்தின் தொடக்க விழாவில் காவேரி செரிமான அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பி. பாசுமணி பேசுகையில், ” குடல் புண் (அல்சர்), இரைப்பையில் பாதிப்புகள் அல்லது கல்லீரல் நோய் தொடர்பான ரத்தக்கசிவு போன்றவற்றால் குடல் இரத்தக்கசிவு (GI Bleed) ஏற்படலாம். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நோயாளியின் நிலையை சீராக்கி, சரியான சிகிச்சையை உடனடியாக வழங்குவது அவசியம்; தாமதம் ஏற்பட்டால் இது உயிருக்கு ஆபத்தாக மாறலாம். இதற்கு முறையான, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை அவசியம். காவேரி ஜிஐ ப்ளீட் சிகிச்சை மையத்தில், ஒவ்வொரு கட்டத்திலும் தகுந்த நேரத்திற்குள் சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய சிறப்பான உத்திகளையும், நெறிமுறைகளையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் நோயாளியின் நலன் கருதி ஒருங்கிணைந்து செயல்படுவதே, சிகிச்சையின் பலனை மேம்படுத்தி, அது வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.” என்றார்.

இந்த முன்முயற்சியின் நோக்கம் குறித்து காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “மருத்துவ அவசர நிலைகளின் போது, சரியான நேரத்திற்குள் சிறப்பு சிகிச்சைகள் கிடைக்கப்பெறுவது மிகவும் முக்கியம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள காவேரி மருத்துவமனைகள் மூலம், குடல் ரத்தக்கசிவுக்கு (GI bleed) மேம்பட்ட சிகிச்சை, மக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைப்பதை நாங்கள் இச்சிகிச்சை மையங்கள் மூலம் உறுதி செய்திருக்கிறோம். எந்த அமைவிடமாக இருப்பினும், தொடர்ந்து தரமான மற்றும் பாதுகாப்பான சிகிச்சை நோயாளிகளுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய நெறிமுறைகளை தரப்படுத்துவது எமது இலக்காகும். அவசரநிலை சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் தீவிர சிகிச்சை சேவைகளை தொடர்ந்து மேம்படுத்துவதில் எங்களின் அர்ப்பணிப்பை இந்த முன்னெடுப்பு குறிக்கிறது” என்றார்.