இன்று (ஜூலை 31) உலக வனப்பாதுகாவலர் தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ஆம் தேதி உலக வனப்பாதுகாவலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச வனப்பாதுகாவலர் கூட்டமைப்பின் (IRF) மையக்கருத்தாக “ரேஞ்சர்கள்: மாறுபடும் கோளின் காவலர்கள்” (Rangers: Guardians of a Changing Planet) என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
2006-இல் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க வனப்பாதுகாவலர்கள் ஆற்றிய 20 ஆண்டுகாலப் அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் தன்னலமற்ற சேவையின் பாரம்பரியத்தைப் போற்றுகிறது.
தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றம், வேகமான பல்லுயிர் இழப்பு, மனித-விலங்கு மோதல்கள் மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்ட கொடூரமான வனவிலங்கு குற்றங்கள் எனப் பல ஆபத்தான சவால்களுக்கு நடுவே, தங்களின் உயிரைப் பணயம் வைத்து காடுகளையும் அவற்றில் வாழும் உயிரினங்களையும் இரவு பகலாகக் காக்கும் ரேஞ்சர்களின் ஈடு இணையற்ற பங்கை இத்தீம் உலகிற்கு உரக்கச் சொல்கிறது.
