Tamilசெய்திகள்

ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு (இஸ்ரோ) ஏற்பட்டது. குறிப்பாக, நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மட்டும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதில் பொருத்தப்பட்டிருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த அமேசோனியா என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் அதனுடன் 18 செயற்கைக்கோள்கள் விண்ணில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, தற்போது நடப்பு ஆண்டுக்கான 2-வது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ தயாரானது.

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு வரும் 12-ம் தேதி காலை 5.43 மணிக்கு வானிலை நிலைகளுக்கு உட்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது விண்ணில் செலுத்தப்படுவது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 14-வது ராக்கெட்டாகும்.

விண்ணில் செலுத்தப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதிநவீன சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும்.

இந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் முதல்முறையாக செயற்கைக்கோளை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்காக 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவம் கொண்ட வெப்பத்தகடு பொருத்தப்பட்டு இருக்கிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் திட்டமிட்டபடி நாளை விண்ணில் செலுத்தப்படும். அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.