Tamilசெய்திகள்

அதிமுக, பா.ஜ.க யாருடன் கூட்டணி? – விரைவில் அறிவிக்க இருப்பதாக பிரமேலதா விஜயகாந்த் தகவல்

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை அமைக்க அ.தி.மு.க. திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

இதையொட்டி பா.ம.க., தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் அ.தி.மு.க. சார்பில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது. 14 தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தரும் கட்சியுடன்தான் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்று பிரேமலதா ஏற்கனவே கூறியிருந்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. கூட்டணியில் 7 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், பா.ஜ.க.வுடன் தே.மு.தி.க. ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சென்று முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம்.

* மாநிலங்களவை சீட் கொடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்படாத செய்தி.

* அ.தி.மு.க., பாஜக என இருதரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

* எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

* பாஜகவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை என ஒன்றுமில்லை. கூட்டணி இருந்தால் அறிவிப்போம் என்றார்.