Tamilசெய்திகள்

அதிமுக மக்கள் பலத்தை மட்டுமே நம்புகிறது – அமைச்சர் கடம்பூர் ராஜூ

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.5.14 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டிடத்தை முதல்-அமைச்சர் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்துவிளக்கேற்றி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அ.தி.மு.க. எங்கள் பலத்தையும், மக்கள் பலத்தையும் மட்டுமே நம்புகிறது. மற்றவர்கள் பற்றி கவலைப்பட தேவையில்லை. அ.தி.மு.க. தேர்தலை முழு வீச்சில் சந்தித்து வருகிறது. முதல்-அமைச்சர் அனைத்து பகுதிகளிலும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு அரங்கில் வைத்து மக்களை சந்திக்கிறார்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிதான் வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். ஸ்டாலின் அடுத்தவர்களின் பிளவை பயன்படுத்தி ஆட்சிக்கு வரலாம் என்ற கனவில் இருந்து வருகிறார்.

தோல்வி பயத்தில் தான் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் அமைச்சர்களை தரக்குறைவாக பேசி வருகிறார்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக வருகிற 17-ந்தேதி முதல்-அமைச்சர் தூத்துக்குடி வருகிறார். தொடர்ந்து 18, 19-ந்தேதிகளில் நெல்லை, தென்காசியில் பிரசாரம் மேற்கொள்கிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.சண்முகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.