Tamilசெய்திகள்

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கோவில்களில் தமிழில் அர்ச்சனை!

கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வார்கள். அவ்வாறு அர்ச்சனை செய்யப்படும்போது அர்ச்சகர்கள் சமஸ்கிருதத்தில் வேதமந்திரங்களை உச்சரிப்பார்கள். இது சமஸ்கிருதம் தெரியாத பக்தர்களுக்கு புரிவதில்லை.

இதனால் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. இதற்காக கோவில்களில் ஏற்பாடுகள் செய்திருந்தாலும் முறையாக நடைபெறுவது கிடையாது.

தற்போது அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தமிழில் அர்ச்சனை செய்யும் முறையை தீவிரப்படுத்தி இருக்கிறார். அவரது உத்தரவுப்படி வருகிற 5-ந் தேதி (வியாழன்) முதல் திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்குகிறது.

சென்னையில் வடபழனி முருகன் கோவில், கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் தமிழிலும் அர்ச்சனை நடைபெறும்.

இந்த கோவில்களுக்கு சென்று தமிழில் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் இனி தமிழில் வழிபாடு செய்யலாம்.

இதற்காக தமிழில் அர்ச்சனை செய்ய அர்ச்சகர்களையும் தேட வேண்டாம். கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயரும், செல்போன் எண்ணும் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டிருக்கும். அந்த எண்ணுக்கு அழைத்து விரும்பும் சன்னதியில் விரும்பும் தெய்வங்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

இந்த வசதி தமிழகத்தில் உள்ள முதுநிலை கோவில்களான 47 கோவில்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த கோவில்கள் விபரம் வருமாறு:-

ராமேசுவரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி நெல்லையப்பர், மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம், அழகர்கோவில், பழனி, மருதமலை, திருத்தணி, திருவானைக்காவல், திருவண்ணாமலை உள்ளிட்ட 47 கோவில்கள்.

மேலும் கோவில்களில் குறைகள் இருந்தால் ஆன்லைனில் பக்தர்கள் புகார் செய்யலாம். 15 நாட்களுக்கு ஒருமுறை புகார்கள் அனைத்தும் இணைகமி‌ஷனர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.