Tamilசெய்திகள்

ஆதித்யா எல்-1 விண்கல வடிவமைப்பின் திட்ட இயக்குநராக பணியாற்றும் தென்காசியை சேர்ந்த பெண் விஞ்ஞானி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு மகத்தான சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில், சந்திரனில் இதுவரை எந்த நாடுகளும் ஆய்வு செய்திடாத தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 வெற்றிக்கரமாக தரையிறங்கியது.

இந்தியாவின் இந்த சாதனையை உலக நாடுகள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய், நிலவை தொடர்ந்து சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். சூரியன் குறித்த ஆராய்ச்சிக்கு இதுவரை அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவை மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. இந்த திட்டம் வெற்றி பெற்றால், அந்த வரிசையில் இந்தியா 4-வது இடத்தை பெறும்.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்-1 விண்கலம் திட்ட இயக்குநராக, தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி செயல்பட்டு வருகிறார். இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் ஆவார். தனது ஆரம்ப கல்வியை செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கற்றார். பின்னர் மேல்நிலை கல்வியை செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்றார். பின்னர் நிகர் சாஜி, 1982 முதல் 1986 வரை தனது இளநிலை பொறியியல் படிப்பை நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்துள்ளார்.

தற்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வரும் நிகர் சாஜியின் கணவர் வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் டாக்டராக உள்ளார். மகன் வெளிநாட்டில் என்ஜினீயரிங் பயின்று வருகிறார்.

ஆதித்யா எல்-1 ஆய்வு திட்டத்தின் முழு பணிகளும், உள்நாட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது. ஆதித்யா செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டு விட்ட நிலையில் இதை பி.எஸ்.எல்.வி.-எக்ஸ்எல்(சி-57) என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும். இத்தகைய விண்கலம் தயாரிப்பில் திட்ட இயக்குனராக முதன்மையான இடத்தில் இருக்கும் நிகர் சாஜி தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது அப்பகுதி மக்களுக்கு பெருமையை தேடி தந்துள்ளது.